சனவரி 24 | தை 10
வேலூர்,
தமிழகத்தில் உள்ள ஐடிஐகளில் (ITI) தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு 10 மற்றும் 12-ம் வகுப்பிற்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை வழங்கியுள்ளது.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் கீழ், மாநிலம் முழுவதும் ஏராளமான அரசு ஐடிஐகள் செயல்பட்டு வருகிறது. இதில் பிட்டர், மோட்டார் வாகன மெக்கானிக் உள்ளிட்ட பல்வேறு வகையான பாடப்பிரிவுகள் உள்ளது. இதுதவிர தொழிற்சாலைகளின் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப அட்வான்ஸ்டு சிஎன்சி மெஷினிங், மின்சார வாகன மெக்கானிக், இண்டஸ்ட்ரியல் ரோபோடிக்ஸ் மற்றும் டிஜிட்டல் மேனுபக்சரிங் உள்ளிட்ட பாடப்பிரிவுகளும் உள்ளது.
இந்த மையத்தில் நவீன தொழில்நுட்ப கருவிகள், ரோபோ பயன்பாடு, பெயிண்டிங் தொழில்நுட்பம், தானியங்கி கணினி வழி பயன்பாடு, நவீன உற்பத்தி முறைகள் உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதன் காரணமாக, ஒவ்வொரு வருடமும் ஏராளமான மாணவ - மாணவிகள் ஆர்வத்துடன் ஐடிஐ படிப்புகளில் சேர்ந்து படித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது ஐடிஐகளில் பயிற்சி முடித்து செல்லும் மாணவர்கள் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்-2 விற்கு இணையான சான்றிதழ் பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை அதிகாரிகள் கூறியதாவது:
தகுதிகள் மற்றும் நடைமுறைகள்:
- 10-ம் வகுப்பு இணையான சான்றிதழ்: இதனைப் பெற 8-ம் வகுப்பு தேர்ச்சியுடன், தேசிய தொழிற்துறை சான்றிதழ் (NTC) மற்றும் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் (NAC) பெற்றிருக்க வேண்டும். மேலும், 10-ம் வகுப்பு தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
- பிளஸ்-2 இணையான சான்றிதழ்: இதனைப் பெற 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று தேசிய தொழிற்துறை சான்றிதழ் மற்றும் தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். மேலும், பிளஸ்-1, பிளஸ்-2 வில் தமிழ் மற்றும் ஆங்கில மொழிப் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை அரசுத் தேர்வுகள் இயக்ககத்தால் வழங்கப்பட்ட மதிப்பெண் பட்டியல் நகல் மற்றும் தொழிற்பயிற்சி நிலையத்தில்தேர்ச்சி பெற்ற சான்றிதழ் நகல்களுடன் சேர்த்து சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை சேலம், தர்மபுரி, ஓசூர், நாமக்கல், கிண்டி, செங்கல்பட்டு, அம்பத்தூர், வேலூர், அரக்கோணம், கோவை, ஈரோடு, கரூர், குன்னூர், திருப்பூர், திண்டுக்கல், மதுரை, பரமக்குடி, சிவகங்கை, தேனி, நாகர்கோவில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், நாகை, புதுக்கோட்டை உள்ளிட்ட அரசு ஐடிஐகளுக்கு நேரடியாகவோ அல்லது பதிவுத் தபால் மூலமாகவோ அனுப்ப வேண்டும்.
வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை ஆணையரகத்தில் பெறப்படும் விண்ணப்பங்கள் ஆய்வு செய்யப்பட்டு, சான்றிதழ்களின் உண்மைத்தன்மை உறுதி செய்யப்படும். அதனைத் தொடர்ந்து, இணைச் சான்றிதழ்கள் வழங்கப் பரிந்துரையுடன் அரசுத் தேர்வுகள் இயக்ககத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அங்கிருந்து பெறப்படும் பரிந்துரையின் அடிப்படையில், மொழிப் பாடச் சான்றிதழ் உண்மைத்தன்மை சரிபார்க்கப்பட்டு, விண்ணப்பதாரர்களுக்கு சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

