சனவரி 23|தை 09
சேலம்
ஓமலூர் அருகே உள்ள சாமிநாயக்கன்பட்டி பகுதியில் நிகழ்ந்த இந்த விபத்து, மதுப்பழக்கம் மற்றும் கவனக்குறைவு காரணமாக ஒரு இளம் உயிர் எவ்வாறு பறிபோகிறது என்பதற்கு வேதனையான உதாரணமாக மாறியுள்ளது. சாமிநாயக்கன்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன் தனுஷ் (18). இவர் சேலம் அழகாபுரம் பகுதியில் உள்ள வாட்டர் சர்வீஸ் நிலையம் ஒன்றில் பணியாற்றி வந்தார்.
நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து வெளியே சென்ற தனுஷ், நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் அவரைத் தேடி வந்தனர். வீட்டின் அருகிலுள்ள ரயில் தண்டவாளப் பகுதியில் தேடியபோது, தனுஷ் ரயிலில் அடிபட்டு உடல் துண்டான நிலையில் சடலமாகக் கிடந்ததைக் கண்டு பெற்றோர் அதிர்ச்சியில் உறைந்தனர்.
தனுஷிற்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இரவு அவர் மதுபாட்டிலுடன் தண்டவாளப் பகுதிக்குச் சென்றுள்ளார். ஆள் நடமாட்டம் இல்லாத தண்டவாளத்தில் அமர்ந்து அவர் மது அருந்திக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த ரயிலின் சத்தம் மது போதையில் இருந்த அவருக்குத் தெரியவில்லை எனக் கூறப்படுகிறது.
எதிர்பாராத விதமாக ரயில் அவர் மீது மோதியதில், உடல் சிதைந்து சம்பவ இடத்திலேயே தனுஷ் உயிரிழந்தார். சேலம் ரயில்வே போலீசார் தனுஷின் உடலை மீட்டுப் பிரேதப் பரிசோதனைக்காகச் சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
செய்திகளுக்காக news.tnebatu.com பார்வையிடவும்.
செய்திகளை 8825798959 இந்த whatsapp எண்ணில் இலவசமாக பதிவு செய்யலாம்.

