வாணியம்பாடி, பிப்ரவரி-12
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, ஆலங்காயம் அடுத்த 102 ரெட்டியூர் பகுதியை சேர்ந்த இளையராஜா, பிரியா தம்பதியினர் தங்களது 2 குழந்தைகளை இருசக்கர வாகனத்தில் அழைத்துக்கொண்டு நிம்மியம்பட்டு நோக்கி சென்றுக்கொண்டிருந்த போது முல்லை என்ற இடத்தில் சிறிய ரக சரக்கு வாகனம் இருசக்கர வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளானதில் சிறுவன் சந்தீஷ் (5) மீது சரக்கு வாகனத்தின் சக்கரம் ஏறி இறங்கியதில் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பலி.
இளையராஜா மற்றும் அவரது 10 வயது மகள் நட்சத்திரா ஆகிய இருவரும் அருகே இருந்த பள்ளத்தில் விழுந்து படுகாயம் அடைந்தனர்.படுகாயம் அடைந்தவர்களை பொதுமக்கள் மீட்டு சிகிச்சைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற ஆலங்காயம் போலீசார் சிறுவன் சந்தீஷின் உடலை மீட்க முயன்ற போது, விபத்துக்கு காரணமாக லாரி ஓட்டுநரை கைது செய்ய வேண்டும் என்று உறவினர்கள், அங்கு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வாணியம்பாடி காவல் துணை கண்காணிப்பாளர் மகாலட்சுமி சிறுவனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு தப்பியோடிய லாரி ஓட்டுநரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தின் பேரில் சிறுவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.சம்பவம் குறித்து ஆலங்காயம் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனர்.


