பிப்ரவரி 21|மாசி 09
சென்னை,
ராஜலட்சுமி என்பவர் சென்னை காவல் துறை பாலியல் தடுப்புப் பிரிவில் ஆய்வாளராக பணிபுரிகிறார். இவர் திருமங்கலம், வெல்கம் காலனியில் குடும்பத்துடன் வசிக்கிறார்.
இவர் பணியின்போது தனது அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி முறைகேடாக அதிகளவில் பணம் சம்பாதித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதை அடிப்படையாக வைத்து கடந்த 13-ம் தேதி இவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீஸார் சோதனை நடத்தினர்.
இவர் கடந்த 1999ம் ஆண்டு நேரடியாக உதவி ஆய்வாளராக தனது போலீஸ் வேலையை தொடங்கினார். அதன் பிறகு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்துப் பிரிவு எனப் பல்வேறு முக்கியத் துறைகளில் செல்வாக்கு மிக்க பொறுப்புகளை வகித்துள்ளார்.
இவர் அதிகாரத்தில் இருந்த காலத்தை பயன்படுத்தி சட்டவிரோதமாக பெரும் அளவில் பணம் சம்பாதித்ததாக சென்னை ஆலந்தூரில் உள்ள லஞ்ச ஒழிப்புத் துறை தலைமையகத்திற்கு வரிசையாக புகார்கள் சென்றவண்ணம் இருந்தன.
இந்த குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளும் தங்களது ரகசிய விசாரணையை தொடங்கினர். அப்போது கிடைத்த முதற்கட்ட ஆதாரங்களின்படி, கடந்த பிப்ரவரி 13ம் தேதி ராஜலட்சுமியின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடிச் சோதனையில் ஈடுபட்டனர்.
சோதனை முடிவில் பல்வேறு சொத்துகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீஸார் பறிமுதல் செய்து கையோடு எடுத்துச் சென்றனர். இதன் தொடர்ச்சியாக வருமானத்தை விட 372% அதிக சொத்து சேர்த்ததாக ஆய்வாளர் ராஜலட்சுமி மீது வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
அதில், “குற்றச்சாட்டுக்கு உள்ளான ஆய்வாளர் ராஜலட்சுமி மது விலக்கு அமலாக்கப் பிரிவு, பொருளாதார குற்றப்பிரிவு, பாலியல் தடுப்புப் பிரிவு, போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போன்ற முக்கியமான இடங்களில் பணிபுரிந்தபோது தனது பதவியை துஷ்பிரயோகம் செய்து, 01.06.2017 முதல் 30.06.2025 வரையிலான கால கட்டத்தில், அசையும் மற்றும் அசையா சொத்துக்களை வாங்கி குவித்திருந்துள்ளார்.
2017ம் ஆண்டு தொடக்கத்தில் வெறும் 3.64 லட்ச ரூபாயாக இருந்த அவரது சொத்து மதிப்பு, 2025ம் ஆண்டிற்குள் பல கோடிகளை தொட்டுள்ளது. தனது வருமானத்தை விட ஊழல் மற்றும் சட்டவிரோத வழிகளில் ரூ.5.42 கோடிக்கு சொத்துகளை தனது பெயரிலும், குடும்ப உறுப்பினர்களின் பெயரிலும் வாங்கியுள்ளார்.
அதாவது வருமானத்தை விட 372% அதிகளவில் சொத்து சேர்த்துள்ளார். இதையடுத்து, அவர் மீது ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழக காவல்துறையில் எத்தனையோ நேர்மையான அதிகாரிகள் பணியாற்றி வருகிறார்கள். ஆனால், இவர் காவல் துறையிலேயே, தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார் என்பது உறுதியாக கணள்ளது.

