பிப்ரவரி 21|மாசி 08
சேலம்,
சேலம் மாவட்டம், ஏற்காடு முருகன் நகர் பகுதியை சேர்ந்த திசாநாயகம் என்பவரது மகன் தமிழரசு வயது 25 இவர் சுற்றுலா வாகனம் ஓட்டும் வேலை செய்து வரும் நிலையில் நேற்று முன்தினம் பூச்சி மருந்தை தண்ணீரில் கலந்து குடித்து தற்கொலை செய்து கொள்வதை தனது போனில் வீடியோ பதிவு செய்து தனது அம்மாவிற்கு அனுப்பியுள்ளார். அதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது குடும்பத்தார் உடனடியாக விரைந்து வந்து தமிழரசை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஏற்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இது குறித்த தகவலறிந்து மருத்துவமனைக்கு சென்ற ஏற்காடு போலீசார் விசாரணை மேற்கொண்டனர். போலீஸ் விசாரணையில், தமிழரசுக்கு கடந்த 2021 ஆம் ஆண்டு திருமணமாகி கருத்து வேறுபாடு காரணமாக தனது மனைவியுடன் 2023-ல் விவாகரத்து பெற்றுள்ளார் பின்னர் அவரது தங்கையின் தோழியான ரெட்டியூர் பகுதியை சேர்ந்த மூர்த்தி என்பவரின் மகள் லோகேஸ்வரி என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு இவர்களது பழக்கம் காதலாக மாறி இருவரும் காதலித்து வந்துள்ளனர். தமிழரசு பட்டியலினத்தை சேர்ந்தவர் என்பதால் இவர்களது காதலை அறிந்த லோகேஸ்வரியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து லோகேஸ்வரிக்கு வேறு ஒருவருடன் திருமண ஏற்பாடு செய்தனர். ஆனால், லோகேஸ்வரி குடும்பத்தை எதிர்த்து தமிழரசனை கடந்த 2024 -ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டிருக்கிறார். இவர்களுக்கு 1வயதில் பெண் குழந்தை ஒன்று உள்ளது. இந்த நிலையில் குழந்தைக்கு சாதி சான்றிதழ் வாங்குவதில் தமிழரசு மற்றும் லோகேஸ்வரி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது.
இதில் தழிழரசு தனது ஜாதியான SC என்று சான்றிதழ் வாங்க வேண்டும் என்றும், லோகேஸ்வரி வன்னியர் என்பதால் MBC என்றுதான் சான்றிதழ் வாங்க வேண்டும் என்று சண்டை நடந்துள்ளது. இதில் லோகேஸ்வரி தழிலரசுவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சண்டை போட்டுகொண்டு கடந்த குழந்தையுடன் தனது தந்தை மூர்த்தி வீட்டுக்கு சென்றுவிட்டார். இதனைத்தொடர்ந்து தமிழரசு தனது மாமனார் வீட்டிற்கு சென்று லோகேஸ்வரியை வீட்டிற்கு வருமாறு அழைத்த நிலையில் லோகேஸ்வரி வர மறுத்து தமிழரசை சாதி ரீதியாக திட்டி அவமானப்படுத்தியதாக கூறப்படுகிறது, மேலும் அங்கிருந்த லோகேஸ்வரின் தந்தை மூர்த்தி, அக்கா அபி மற்றும் அவரதுபெரியம்மா மகன் சௌந்தர் ஆகியோர் தமிழரசை கெட்ட வார்த்தைகளால் திட்டி ஜாதி பெயரை கூறி திட்டியுள்ளனர். இதனால் தமிழரசு தனது குழந்தையை தூக்கிக்கொண்டு அங்கிருந்து ஏற்காடு வந்துள்ளார்.
அதை தொடர்ந்து அவரது மனைவி லோகேஸ்வரி தழிழரசுக்கு போன் செய்தும் வாட்ஸ்அப் மூலமும் தொடர்ந்து சாதி ரீதியாக கெட்ட வார்த்தைகளால் திட்டியுள்ளார். மேலும் லோகேஸ்வரியின் அண்ணன் சௌந்தர் தமிழரசுவின் அம்மாவிற்கு போன் செய்து அவர் ரெட்டியூர் வந்தால் காலி செய்து விடுவேன் என்று கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதனால் மனமுடைந்த தமிழரசு பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இதனை தொடர்ந்து தமிழரசு தரப்பினர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஏற்காடு போலீசார் லோகேஸ்வரி, அவரது தந்தை மூர்த்தி, தாய் மாலதி, அக்கா அபி, அண்ணன் சௌந்தர் ஆகியோர் மீது எஸ்.சி., எஸ்.டி., ஆக்ட் மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தற்கொலை முயற்சி செய்த போது தமிழரசு அவரது தாய்க்கு “இந்த பறையர் சாதியில பொறந்தது என் தப்பா? நான் என்ன பண்ண முடியும்.. அம்மா நான் உங்க கூட இருக்க மாட்டேன் என் குழந்தையை மட்டும் நல்லா பாத்துக்கோங்க. அவ சரக்கு எல்லாம் விக்கிறா, அவ கூட என் குழந்தை இருந்தா.. நல்லா வளராது” என பேசி வீடியோ பதிவு அனுப்பியுள்ளது அப்பகுதி மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது சேலம் அரசு மருத்துவமனையில் தமிழரசிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
(குறிப்பு: மன அழுத்தம் அல்லது தற்கொழ்ணலை எண்ணம் ஏற்பட்டால், அரசு உதவி மையமான 104 அல்லது சினேகா உதவி மையம் 044-24640050 ஆகிய எண்களைத் தொடர்பு கொண்டு ஆலோசனை பெறலாம்.)

