நவம்பர் 11|ஐப்பசி 25
சென்னை
SIR இணைப்புப் பதிவு இணையதளம் மூலம் வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கம்/சேர்ப்புச் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதாகத் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பாட்நாயக் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் வாக்காளர்கள் வசதிக்காக இந்தியத் தேர்தல் ஆணையம் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் (https://voters.eci.gov.in) இந்த SIR கணக்கீட்டுப் படிவத்தை இணையதளம் மூலம் நிரப்புவதற்கான வசதியை ஏற்படுத்தியுள்ளது.
வாக்காளர்கள் தங்களது பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண் அல்லது வாக்காளர் அடையாள அட்டை எண்ணைப் பயன்படுத்தி இணையதளத்தில் நுழைந்து பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) உள்ளிட்டு நுழைய வேண்டும். உள்நுழைந்த பின்னர், அங்கு இணைக்கப்பட்டிருக்கும் Enumeration Form என்னும் இணைப்புப் படிவத்தைத் தேர்வு செய்ய வேண்டும். இந்த வசதியை வாக்காளர் பட்டியலில் உள்ள உங்களது பெயர் மற்றும் உங்களது பெயருடன் உள்ள குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்.
வெற்றிகரமாக உள்நுழைந்த பிறகு, வாக்காளர் இணைப்புப் பக்கத்தில் கோரப்படும் தேவையுள்ள விவரங்களை நிரப்ப வேண்டும் .சரியான விவரங்களைப் பதிவிட்ட பிறகு இணையவழிப் பக்கத்தில் e-sign வசதிக்குப் பிறகு மீண்டும் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணுக்கு ஒருமுறை கடவுச் சொல் (ஓடிபி) அனுப்பப்படும்.
அந்த ஒருமுறை கடவுச் சொல்லை உள்ளிட்டவுடன், படிவம் வெற்றிகரமாகப் பதிவேற்றப்படும். தங்களது அலைபேசி எண்களைப் பதிவு செய்திருக்கும், மேலும் வாக்காளர் பட்டியலில் மற்றும் ஆதாரப் பதிவுகளில் பெயர் பொருந்தி உள்ள வாக்காளர்கள் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

