நவம்பர் 25|கார்த்திகை 09
பொம்மிடி
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை 24 மணி நேரமும் செயல்படும் 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி பா.ஜெபசிங் பலமுறை கோரிக்கை வைத்து வந்தார். இதற்கு கடந்த சில மாதங்களுக்கு முன் மாவட்ட சுகாதார துறை அளித்த பதிலில், "8 கிலோமீட்டர் தொலைவுக்குள் வேறு மேம்படுத்தப்பட்ட மருத்துவமனை இருக்கக்கூடாது, 30 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்க வேண்டும்" என்ற நிபந்தனைகளை கூறி மறுத்திருந்தது.
இதையடுத்து பா.ஜெபசிங் முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு மனு அளித்தார். அதில், "பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து 8 கிலோமீட்டர் தொலைவுக்குள் எந்த அரசு மருத்துவமனையும் இல்லை, நகர மக்கள் தொகையுடன் சுற்றியுள்ள திப்பிரெட்டிஅள்ளி, கொண்டகரஅள்ளி, வே.முத்தம்பட்டி, கோடுஅள்ளி, B. துறிஞ்சிப்படடி, B. பள்ளிப்பட்டி, ரேகடஅள்ளி, ராமமூர்த்திநகர், வீராச்சியூர் உள்ளிட்ட கிராம மக்கள் தொகையும் சேர்த்தால் 50 ஆயிரத்தை தாண்டும்" என்று குறிப்பிட்டு உரிய நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி இருந்தார்,
இதனை பரிசீலித்து தமிழக அரசும், தர்மபுரி மாவட்ட சுகாதார துறையும் பொ.மல்லாபுரம் ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்பினமாக கருத்தில் கொண்டு 30 படுக்கைகள் கொண்ட மேம்படுத்தப்பட்ட சுகாதார நிலையமாக மாற்ற ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பொ.மல்லாபுரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயனடைவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



